அல் அக்ஸா மஸ்ஜித் உலக முஸ்லிம்களுடையது: அக்ஸா மஸ்ஜித் இமாம்

மஸ்ஜிதுல் அக்ஸா உலகத்தின் அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது என 
அக்ஸாமஸ்ஜிதின் இமாம் டாக்டர்.பேராசிரியர்.யூஸுஃப் ஜுமா ஸலாமா தெரிவித்துள்ளார்.

துபாயில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருது நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக துபாய் சேம்பர் ஆஃப் காமேர்ஸின் ஆடிட்டோரியத்தில் உரை நிகழ்த்தினார் அவர்.

உரையில் அவர் கூறியதாவது;"மஸ்ஜிதுல் அக்ஸா உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமானது.இந்த சிந்தனையோடுதான் பிரச்சனையை அணுகவேண்டும்.அக்ஸா மஸ்ஜித் ஃபலஸ்தீன்களுக்கு மட்டும் உரிமையுடையது என செய்தி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அக்ஸா மஸ்ஜிது மீது யூதர்கள் உயர்த்தும் உரிமை போலியானது. அவர்களுடைய கோரிக்கையை நிரூபிக்க எவ்வித ஆதாரத்தையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. குத்ஸின் மண்ணில் குடியேறிய யூதர்கள் 80 ஆயிரம் ஃபலஸ்தீன் முஸ்லிம்களை இங்கிருந்து விரட்டியுள்ளனர்.இங்கு முஸ்லிம்கள் நுழைவதை தடைச் செய்கின்றனர்.யூதர்களின் இத்தகைய செயல்களுக்கு குற்றம் சுமத்தவேண்டியுள்ளது.

உலக முஸ்லிம்களின் இதயம் குத்ஸ்.வரலாற்று ரீதியாகவும்,கலாச்சார ரீதியாகவும் முஸ்லிம் உலகத்தோடு அடையாளப்படுத்தப்படுகிறது குத்ஸ்.

இது முஸ்லிம்களின் நம்பிக்கையோடு தொடர்புடைய வரலாறு ஆனதால் இதனை எவராலும் துடைத்து எறிய இயலாது." இவ்வாறு உரைநிகழ்த்திய அவர் ஃபலஸ்தீனில் மஸ்ஜிதுகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நிர்மாணிப்பதற்கு உதவி அளித்துவரும் ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர்களை பாராட்டினார்.

துபாய் அரசின் அழைப்பை ஏற்றுத்தான் டாக்டர் ஜுமா ஸலாமா வருகை புரிந்துள்ளார்.