Big Bang Theroy

கேள்வி:வானங்களையும் - பூமியையும் 6 நாட்களில் படைத்ததாக குர்ஆனின் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாயம் ஃபுர்ஸிலாத்தில் வானங்களும் - பூமியும் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடு இல்லையா?. மேலும் அதே வசனத்தில் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாகவும் - பின்னர் இரண்டு நாட்களில் வானங்களை படைத்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. வானங்களும் - பூமியும் ஒரே நேரத்தில் உருவாயின என்று அறிவியல் கூறும் 'பெரும் வெடிப்பு விதிக்கு' (Big Bang Theroy) மாற்றமாக இந்த வசனம் அமைந்துள்ளதா இல்லையா? 

பதில்!

வானங்களையும் - பூமியையும் ஆறு நாட்களில் (அதாவது ஆறு நீண்ட காலங்களில்) படைக்கப்பட்டன என அருள்மறை குர்ஆன் சொல்கிறது என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். இது பற்றிய விபரம் அருள்மறை குர்ஆனின் கீழக்குறிப்பிட்ட அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் 7 ஸுரத்துல் அஃராஃபின் 54வது வசனம்

அத்தியாயம் 10 ஸுரத்துல் யூனுஸின் 3வது வசனம்

அத்தியாயம் 11 ஸுரத்துல் ஹுதுவின் 7வது வசனம்

அத்தியாயம் 25 ஸுரத்துல் ஃபுர்கானின் 59வது வசனம்

அத்தியாயம் 32 ஸுரத்துல் ஸஜ்தாவின் 4வது வசனம்

அத்தியாயம் 50 ஸுரத்துல் கஃப்வின் 38வது வசனம்

அத்தியாயம் 57 ஸுரத்துல் ஹதீதின் 04வது வசனம் 

ஆகிய வசனங்களில் வானங்களும் - பூமியும் ஆறு நாட்களில் (அதாவது ஆறு நீண்ட காலங்களில்) படைக்கப்பட்டன என அருள்மறை குர்ஆன் சொல்கிறது. 

தாங்கள் சொல்வது போன்று வானங்களும் - பூமியும் எட்டு நாட்களில் படைக்கப்பட்டன என்கிற அர்த்தத்தில் வருகின்ற வசனம் அருள்மறை குர்ஆனின் 41வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்ஸிலாத்தின் 9வது வசனம் முதல் 12வது வசனம் வரையிலானது. மேற்படி வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

'பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்?. அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன் என்று (நபியே!) நீர் கூறுவீராக.'. (அல் குர்ஆன் 41: 9)

அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்;;: அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான். இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான். (இதைப்பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்). (அல் குர்ஆன் 41: 10)

பிறகு அவன் வானம் புகையாக இருந்த போது (அதைப் படைக்க) நாடினான்: ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: 'நீங்கள் விருப்புடனாயினும், அல்லது வெறுப்பிருப்பினும், வாருங்கள்' என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் 'நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்' என்று கூறின. (அல் குர்ஆன் 41: 11)

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக உயர்த்தினான். ஓவவொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான். இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகள் கொண்டு அலங்கரித்தோம். இன்னும் அதனை நாம் பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இது யாவரையும் மிகைத்தவனும், ஞானமிக்கோனுமாகிய (இறை) வனுடைய ஏற்பாடேயாகும். (அல் குர்ஆன் 41: 12)

மேற்படி வசனங்களை மேலோட்டமாகப் படித்துப் பார்த்தால் வானங்களும் - பூமியும் எட்டு நாட்களில் படைக்கப்பட்டன என்கிற அர்த்தம்தான் தொனிக்கும். 

2. மேற்படி வசனத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கும் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' என்று பொருள்.

மேற்படி வசனத்தை நீங்கள் கூர்ந்து ஆராய்ந்தால் மேற்படி வசனம் இரண்டு வித்தியாசமான படைப்புகளான பூமி மற்றும் வானம் இவைகளைப்பற்றி சொல்வதை அறியலாம். மலைகள் இல்லாத பூமி இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது. பூமி அசையாது நிலையாக நிற்கும் பொருட்டு பூமியின் மீது மலைகளை நான்கு நாட்களில் படைத்தான். ஆக பூமியும் - அதன் மீது நிறுத்தப்பட்டிருக்கும் மலைகளும் நான்கு நாட்களில் படைக்கப்பட்டன என்பதை அருள்மறை குர்ஆனின் 41வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்ஸிலாத்தின் ஒன்பது மற்றும் பத்தாவது வசனங்களின் பொருளாகும். மேற்படி அத்தியாயத்தின் 11 மற்றும் 12வது வசனம் கூறுவது என்னவெனில் அத்துடன் கூடி வானங்களும் இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது என்பதாகும். மேற்படி அத்தியாயத்தின் 11வது வசனத்தின் ஆரம்ப வார்த்தையான 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' அல்லது 'பின்னர்' என இரு அர்த்தங்கள் கொள்ளலாம். குர்ஆனின் ஆங்கில மொழியாக்கங்கள் சில வற்றில் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'பின்னர்' என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது . 'பின்னர்' என்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டால், பூமியும், பூமியின் மீது மலைகளும் 6 நாட்களில் படைக்கப்பட்டுப், பின்னர் இரண்டு நாட்களில் வானங்கள் படைக்கப்பட்டது என்கிற தவறான பொருளைத்தான் தரும். மேற்படி பொருள் அறிவியல் சொல்லும் 'பெரும் வெடிப்பு விதியோடு' "(Big Bang Theroy) முரண்படுவதோடு, அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 30வது வசனமான 'வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்) தோம்' என்கிற வசனத்தோடும் முரண்படும். 

எனவே மேற்படி வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' என்று பொருள் கொள்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த அப்துல்லா யூசுப் அலி அவர்கள் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' என்றுதான் மொழியாக்கம் செய்துள்ளார். அவ்வாறு மொழியாக்கம் செய்யப்பட்ட மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனத்திற்கு 'மலைகளுடன் கூடிய பூமியை ஆறுநாட்களில் படைத்தான். மேலதிகமாக வானங்களையும் படைத்தான்'. என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொள்ளும்பொழுது, எட்டு நாட்கள் என்கிற தவறான கருத்து கொள்வது தவிர்க்கப்பட்டு, ஆறு நாட்கள் என்கிற சரியான கருத்து நிலை நிறுத்தப்படுகிறது. 

கீழ் குறிப்பிடும் உதாரணத்தின் மூலம் மேற்படி கருத்தை மேலும் சரியான முறையில் புரிந்து கொள்ளலாம்: ஒரு கட்டிடத்தை கட்டுபவர் - அவர் கட்டிய 10 மாடி கட்டிடத்தையும், கட்டிடத்தை சுற்றியுள்ள சுற்றுச் சுவரையும் கட்டி முடிக்க 6 மாதங்கள் எடுத்துக் கொண்டதாக குறிப்பிடுகிறார். முழுக் கட்டிடத்தையும் கட்டி முடித்த பின்பு - கட்டிடம் கட்டியது பற்றிய அறிக்கையில் கட்டிடத்தின் அடிப்பகுதிகளை கட்டி முடிக்க இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் - கட்டிடத்தின் மேற்பகுதியை கட்டி முடிக்க நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் - அத்துடன் சேர்த்து - கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கும் பொழுதே - கட்டிடத்தின் சுற்றுச் சுவர்களையும் இரண்டு மாதங்களில் கட்டி முடித்ததாக தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மொத்தக் கட்டிடமும் கட்டி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட காலம் 6 மாதங்கள் என்பதை மேற்படி அறிக்கையிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். அவர் சொன்ன முதலாவது அறிக்கை - அவர் சொன்ன இரண்டாவது அறிக்கையோடு முரண்படவில்லை. மாறாக கட்டிடம் கட்டி முடித்த காலத்தை பற்றிய அதிக விபரங்களைத்தான் தெரிவிக்கிறது. 

3. வானங்களும், பூமியும் ஒரே சமயத்தில்தான் படைக்கப்பட்டன:

அருள்மறை குர்ஆன் பிரபஞ்சம் முழுவதையும் படைக்கப் பட்டதை பற்றி ஏராளமான வசனங்களில் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனீன் 7:54, 10:3, 11:7, 25:59, 32:4, 50:38, 57:4 ஆகிய வசனங்களில் வானங்களும், பூமியும் என்றும், அருள்மறை குர்ஆனீன் 49:9-12, 2:29, 20:4 ஆகிய வசனங்களில் பூமியும், வானங்களும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 30வது வசனம் பெரும் வெடிப்பு பற்றி கூறுவதுடன், வானங்களும், பூமியும் ஒரே சமயத்தில் உருவாக்கப்பட்டன என்றும் குறிப்பிடுகிறது. 

அது போன்று அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 29வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது:

அ(வ் விறை) வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்தான். பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான். அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 2:29) 

மேற்படி வசனத்திலும் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'பின்னர்' என்று பொருள் கொள்வோம் எனில் - இந்த வசனமும் பெரும் வெடிப்பு விதியுடன் முரண்படுவதோடு, வானங்களையும், பூமியையும் படைத்தது பற்றிக் குறிப்பிடும் அருள்மறை குர்ஆனின் மற்ற வசனங்களுடனும் முரண்படும். எனவே ஸுரத்துல் ஃபுர்ஸிலாத்தின் குறிப்பிட்ட வசனத்தில் வரும் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' அல்லது 'அத்துடன் சேர்த்து' என்று பொருள் கொள்வதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

கேள்வி பதில்


கேள்வி
மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?.

பதில்:

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்பது உண்மை. அடியிற் காணும் விளக்கங்கள் மேற்படி தடையைப் பற்றி தெளிவாக்க உதவும்:

1. நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாது.
நான் ஒரு இந்தியக் குடிமகன். ஆயினும்; ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் - மற்றும் ராணுவத்தோடு தொடர்பு உடையவர்கள் மாத்திரம்தான் ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதி உண்டு. அதுபோல- ஒவ்வொரு நாட்டிலும் - அந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் செல்ல முடியாதவாறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சில இருக்கின்றன. அது போல இஸ்லாம் உலகத்திற்கும் - உலகத்தில் உள்ள மக்களுக்கும் பொதுவான மார்க்கமாக இருந்தாலும் - இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பது - இரண்டு புனித நகரங்களான மக்காவும் - மதினாவுமாகும். இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதியுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் மாத்திரமே.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை செய்திருப்பதை நாட்டின் சாதாரண குடிமகன் எதிர்ப்பது சரியானது அல்ல. அதே போன்றுதான் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது அல்ல.

2. மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதிக்கும் 'விஷா'.
ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் அந்நாட்டிற்கு செல்வதற்காக 'விஷா' அதாவது அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டிற்கு வர அனுமதி பெற வேண்டுமெனில் தமக்கென வித்தியாசமான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ளன. மேற்படி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் - விதிகளுக்கும் தேவைகளுக்கும் உட்படாதவர்களுக்கு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில்லை.

இவ்வாறு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில் கடுமையான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. குறிப்பாக மூன்றாம் தர நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுமதி கொடுப்பதற்கென கடுமையான சட்ட திட்டங்களை வைத்துள்ளது. மூன்றாந்தர நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல விஷா பெற வேண்டுமெனில் ஏராளமான தேவைகளையும் - நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
கடந்த முறை நான் சிங்கப்பூருக்கு சென்றபோது போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை என சிங்கப்பூர் இமிக்ரேஷன் படிவத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் சிங்கப்பூர் செல்ல வேண்டும் எனில் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மரண தண்டனை காட்டுமிராண்டித்தனம் என நான் வாதாட முடியாது. நான் சி;ங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்படுவேன் என்றால் மாத்திரமே என்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பார்கள்.

இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல விரும்பும் எந்த மனிதருக்கும் -இருக்க வேண்டிய ஒரேயொரு முக்கியத் தகுதி என்னவெனில் - தன் உதடுகளால் மொழிந்து உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய
'லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' - வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி அவனது தூதராவார்
 - என்பதுதான்.

கஃபாவுக்கு தலைவணங்குவது


கேள்விஇஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.

பதில்:

கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும். முஸ்லிம்கள் கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் - கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாமியர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அல்லது வேறு எதற்கும் தலைவணங்குவதும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது வேறு எதனையும் தொழுவதுமில்லை.

அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
'(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.'


1. இஸ்லாமிய மார்க்கம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது:
உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் இறைவனைத் தொழ விரும்பினால் - ஒரு சாரார் வடக்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். மற்றொரு சாரார் தெற்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். ஆனால் அந்த ஏக இறைவனாம் அல்லாஹ்வைத் தொழுவதில் கூட இஸ்லாமியர்கள் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்; இறைவனைத் தொழும்போது இஸ்லாமியர்கள் அனைவரும் கஃபாவை முன்னோக்க வேண்டும் என பணிக்கப்பட்டிருக்கிறார்கள். கஃபாவிற்கு மேற்குப்புறத்தில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிழக்குத் திசையில் கஃபா இருப்பதால்) கிழக்குத்திசை நோக்கியும் கஃபாவிற்கு - கிழக்;குத் திசையில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு மேற்குத் திசையில் கஃபா இருப்பதால்) மேற்குத் திசை நோக்கியும் தொழுவார்கள்.

2. உலக வரை படத்தின் மத்தியில் கஃபா அமைந்துள்ளது.
இஸ்லாமியர்கள்தான் உலக வரைபடத்தை முதன் முதலாக வடிவமைத்தார்கள். உலக வரைபடத்தை வடிவமைத்த இஸ்லாமியர்கள் உலக உருண்டையின் தெற்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் - வடக்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். அப்படி வடிவமைத்தபோது இஸ்லாமியர்கள் நோக்கித் தொழும் திசையான கஃபா - உலக வரைபடத்தின் மத்தியில் அமைந்திருந்தது. பின்னர் - மேற்கத்திய உலகின் வரைபடவல்லுனர்கள் உலக வரைபடத்தை வடிவமைத்தபோது - உலக உருண்டையின் வடக்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் - தெற்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். மேற்கத்தியர்கள் உலக வரைபடத்தை மாற்றி வடிவமைத்தாலும் - கஃபா அமைந்தது உலக வரைபடத்தின் மத்தியில்தான்.

3. கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறையைச் சுட்டிக்காட்டவே!
இஸ்லாமியர்கள் மக்காவிற்கு செல்லும் பொழுது மஸ்ஜிதே ஹரத்தில் உள்ள கஃபாவை சுற்றி வலம் வருவார்கள். அவ்வாறு கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறை என்னும் ஏக தெய்வ கொள்கையில் இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுட்டிக் காட்டவும் ஒரு இறைவனையே வணங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவுமே ஆகும். ஒரு வட்டம் ஒரே ஒரு மத்திய புள்ளியை மாத்திரம் கொண்டிருப்பது போன்று வணக்திற்குரிய இறைவனும் அல்லாஹ் ஒருவனே என்பதை உணர்த்த வேண்டியும் ஆகும்.

4. உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்று:
ஹஜ்ர் அல் - அஹ்வத் என்னும் கருப்புக் கல்லைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்றில் கீழக்கண்டவாறு அறிவிக்கிறார்கள்:
'நல்லதோ அல்லது கெட்டதோ செய்ய முடியாத கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன்னைத் தொட்டு - முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் உன்னைத் தொட்டு முத்தமிட்டிருக்க மாட்டேன்'.
மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி என்னும் செய்தி புத்தகத்தில் 56வது அத்தியாயத்தில் 675வது செய்திகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

5. கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்தல்:
அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் - நபித் தோழர்கள் கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்துள்ளனர். கஃபாவை வணங்குவதாக இஸ்லாமியர்களை நோக்கிக் குற்றம் சுமத்துபவரை பார்த்து கேட்கிறேன் - எந்தச் சிலை வணங்கி அவர் வணங்கக் கூடிய சிலையின் மீது ஏறி நிற்பார்?.

மத்ஹபுகளை பின்பற்றலாம் வாங்க


ஓரிறையின் நற்பெயரால்


நீங்க மத்ஹபுகளை பின்பற்றுறீங்களா.?

ஆமாங்க...

பின்பற்ற என்ன காரணம்..?

............................................

(கொஞ்ச நேரம் யோசனைக்கு பிறகு)

நாங்கள் பாரம்பரியமா இந்த மத்ஹபுகளை தான் பின்பற்றுகிறோம் ..
அப்புறம்..... 
நபிகளின் வழிமுறையை இலகுவாக்கி இமாம்கள் பின்பற்ற சொல்றாங்க. பின்பற்றுகிறோம்.  இதில் என்ன தவறு..?
என்பதோடு மட்டுமே முடித்துக்கொள்வார்கள்...
  •  உண்மையாக மத்ஹபுகள் என்ன சொல்லுகிறது., ?
  • இமாம்கள் பெயரில் மத்ஹபுகள் உருவானது எப்படி?
  • இமாம்கள் உண்மையாக என்ன சொன்னார்கள்.. - என்று அலசவே இக்கட்டுரை


    மத்ஹபுகள் என்றால் வழிமுறை என்ற பொதுவான அர்த்தத்தில் கையாளப்பட்டாலும். இவ்வார்த்தை 'தஹப' என்ற வேர்ச்சொல்லிருந்து உண்டானது. இதற்கு போக்கு அல்லது கருத்து என பொருள்படும்.

      அக்காலகட்டத்தில் தான் முன்னிருத்தும் கேள்விகளுக்கு இமாம்களிடமிருந்து பெறப்படும் பதில்களை பொதுவில் வைத்து பிறரிடம் உரையாடும் போது அக்கருத்தை மையப்படுத்த இது இன்னாரின் கருத்து (உம்: இது ஷாஃபி இமாமின் கருத்து) என கூறுவதற்கு இவ்வார்த்தையை பயன்படுத்துவர். பின்னாளில் இது மாற்றமடைந்து மத்ஹபு என்று நிலைப்பெற்றது.

பெரும்பான்மையானவர்களிடம் கேட்டால் மத்ஹபுகள் நான்கு என்றே சொல்லுவர். அது தவறு. மத்ஹபுகள் 1. சைதி மத்ஹபு 2. அவ்சாயி மத்ஹபு 3. ழாஹிரி மத்ஹபு 4. லைதி மத்ஹபு 5. தவ்ரி மத்ஹபு 6. ஜரீரி மத்ஹபு போன்றவைகளும் மத்ஹபுகளுக்குள் அடக்கம். எனினும் இவை காலப்போக்கில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மூன்று அடிப்படை காரணங்கள் பிரதானப்படுத்த படுகிறது அவை

1. இம்மத்ஹபுகளைப் பின்பற்றியோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமை.
2. இம்மத்ஹபை பின்பற்றியோர் அதில் உறுதியாக இல்லாமல் இருந்தது அல்லது பெயரளவில் மட்டும் அதை பின்பற்றியது - மற்றும்
3. மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் அதிக ஈடுபாடு செலுத்தாமை.

இதுவே இம்மத்ஹபுகள் இன்று பெயரளவிற்கு மட்டும் நினைவில் இருக்க காரணங்கள். அதுவல்லாமல் ஹனபி, ஷாஃபி, மாலிக் மற்றும் ஹன்பல் (ஹம்பலி) ஆகிய நான்கு மத்ஹபுகளே அதிக அளவில் பின்பற்றப்படுகிறது(?) இவைகள் குறித்த இமாம்களின் நிலை என்னவென்பதை பார்ப்போம்.

முதலில் இமாம்கள் வாழ்ந்த வருடங்கள் குறித்த காலக்குறிப்பை காண்போம்

மேற்கண்ட கணக்கீட்டில் ஹனபி இமாமே ஆரம்பமானவர் என்பதை அறிய முடிகிறது. தமிழகத்தில் ஏனைய மத்ஹபுகளை விட ஹனபி மத்ஹபுகளை பின்பற்றுவோரே அதிகம். அதாவது மத்ஹபுகளை பின்பற்றுவோரில் நான்கில் ஒருவர் ஹனபி மத்ஹபை சார்ந்தவராவர்.

ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் இயற்பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்). திருக்குர்-ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்த இமாமவர்கள் அந்நாளில் குழப்பங்களின் கூடாரமான கூஃபாவில் வாழ்ந்ததால் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தரம் பிரித்து தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாகவும் இருந்தார்கள். 

அதற்காகவே வாழ் நாளை செலவழித்தார்கள். இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விசயம் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வாழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைக்கவே இல்லை.

ஆனால் இன்று ஹனபி மத்ஹபின் ஆதார நூல்களாக முன்மொழியப்படும் நூற்களெல்லாம் இமாமவர்களின் மறைவிற்கு பின்னரே தொகுக்கப்பட்டன. அதாவது

  •  குத்ரி எனும் நூல் 300 வருடங்களுக்குப் பிறகும்,  
  • ஹிதாயா மற்றும் காஜிகான் எனும் நூல்கள் சுமார் 400 வருடங்களுக்குப் பிறகும், கன்னியா சுமார் 500 வருடங்களுக்குப் பிறகும், 
  • தஹாவி, ஷரஹ் விகாயா, நிகாயா ,கன்ஜ் மற்றும் ஜாமிஉல்ருமூஸ் போன்ற நூற்கள் சுமார் 600 வருடங்களுக்குப் பிறகும், 
  • ஃபதாவே பஜாஸியா, பதாஉல் கதீர் மற்றும் குலாஸத் கைதானி போன்ற நூற்கள் சுமார் 700 வருடங்களுக்குப் பிறகும்,  
  • சல்பீ, தன்வீர் அப்ஸார்,  பஹ்ரு ராயின் மற்றும் தகீரா போன்ற நூற்கள் சுமார் 800 வருடங்களுக்குப் பிறகும், 
  • துர்ருல் முக்தார் சுமார் 900 வருடங்களுக்குப் பிறகும் இறுதியாக 
  • .ஃபதாவா ஆலம்கீரி இமாமவர்கள் மரணித்து 1000 வருடங்களுக்குப் பின்னரே தொகுப்பட்டவைகளாகும்.
     ஆக இமாமின் மறைவுக்கு பின்னர் சுமார் மூன்னூறு ஆண்டுகளுக்கு பிறகே ஏனைய எல்லா நூற்களும் தொகுக்கப்பட்டன. எந்த நூலிலும் இமாமிடமிருந்து எப்படி செய்திகள் சேகரிக்கப்பட்டன என்ற விபரமும் அவற்றை அறிவித்தவர் வரிசை குறித்த தகவலும் இல்லவே இல்லை. 

 மேலும், ஹனபி மத்ஹபின் மிக முக்கிய பிக்ஹு சட்ட நூல்களாக குறிப்பிடப்படும் துர்ருல் முக்தார் மற்றும் ஃபதாவா ஆலம்கீரி ஆகிய இரண்டு நூற்களுக்கும் இமாமின் வாழ்வுக்கும் இடைப்பட்ட கால அளவு சுமார் ஒரு நூற்றாண்டுகள் என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும் ஃபதாவா ஆலம்கீரி எனும் நூல் மார்க்க ரீதியான தொடர்பற்று மெகலாய மன்னர் ஓளரங்கஷீப் காலத்தில் தொகுக்கப்பட்ட ஒன்றாகும். 

 ஆக தமது கருத்துக்கள் சமூகத்திற்கு அவசியமென கருதியிருந்தால் தங்களது  காலத்திலே தமது நூல்களை எழுதி இருப்பார்கள். அல்லது குறைந்த பட்சம் பிறரையாவது எழுத செய்திருப்பார்கள். ஆனால் இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் வரலாற்றில் எங்கேயும் தாமே எழுதியதற்கோ அல்லது பிறரை எழுத பணித்ததற்கோ ஆதாரங்கள் இல்லவே இல்லை. 


மேலும் இமாம் ஷாஃபி அவர்கள், மாலிக் இமாமின் மாணவர் ஆவார். அதுபோலவே, ஷாஃபி இமாமின் மாணவரே ஹன்பல் இமாம் அவர்கள்.இவர்களுள் யாரும் தமது ஆசிரியர்களைப் பின்பற்றவுமில்லை. எந்த ஆசிரியரும் தமது மாணவர்களை தங்களைப் பின்பற்றுமாறு வற்புறுத்தவுமில்லை. ஏனெனில் அவர்களுக்கான தெரிதல்கள் யாவற்றிற்கும் இறைவேதத்தையும் - தூதர் மொழியையும் சார்ந்திருந்தார்கள். 

எனினும் மத்ஹபு உருவாக்கங்கள் பிற்கால உலமாக்களால் ஏற்படுத்தபட்ட வழிமுறை என்பதற்கு இன்னொரு சான்று பாருங்கள்.
  
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் மறைவிற்கு பிறகே அவர்களது மாணவர்களால் அவர்களின் மீது கொண்ட அதீத பிரியம் காரணமாக பின்னாளில் நூற்களாக தொகுக்கப்பட்டன. இன்று ஷாபிஈ மத்ஹபில் மார்க்கத்தீர்ப்பு  வழங்கக்கூடிய (பத்வா) நூல்களான

1.நூல் அல்மஜ்மூ ஷரஹுல் முஹத்தப்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 427 வருடங்கள்

2.நூல் பத்ஹுல் முயுன்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் சுமார் 7 நூற்றாண்டுகள்

3.நூல் இஆனதுத் தாலிபின்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 1062 வருடங்கள்

இடைப்பட்ட காலங்களை கவனிக்கும் போதே இந்நூல்களின் நன்பகத்தன்மைக்குறித்து அதிகம் விளக்க தேவையில்லையென நினைக்கிறேன்...!

இதே நிலை தான் ஏனைய இமாம்களின் பெயரில் நிறுவப்பட்ட மத்ஹபுகளிலும். 

ஆக நான்கு இமாம்களுக்கும் அவர்கள் பெயரால் இன்று சமூகத்தில் நிலவும் மத்ஹபுகளுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை. ஏனெனில் மேற்கண்ட நூற்களை நன்கு ஆராய்ந்தால் முன்னுக்குப்பின் முரண், அல்லாஹ்வும் அவனது தூதரின் சொல்லுக்கும் மாறுபாடு, பகுத்தறிவிற்கு பொருந்தாத வாதங்கள். 

"இமாமுல் அஃலம்! "  தலை சிறந்த இமாம் (கள்) என அனைவராலும் இந்த சமூகத்தில் அறியப்பட்டவர்கள் எப்படி இப்படிப்பட்ட தவறான கருத்துக்களை தருவார்கள்...?

சரி மத்ஹப் பற்றினால் அக்கருத்துக்கள் எல்லாம் எங்களுக்கு ஏற்புடையவைகள் தான் என சொன்னாலும் அதே இமாம்கள் கூறிய செய்திகளையும் கீழே பாருங்கள். நாற்பெரும் இமாம்கள் தங்களது சொல் / செயல் குறித்து என்ன சொல்கிறார்கள் பாருங்கள்.,

இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள்:
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை
(நூல்: ஹாஷியா இப்னுல் ஆபிதீன் பாகம் 6, பக்கம் 293)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்:
நான் (சில நேரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன்;. எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! அவற்றில் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்.
(நூல்: உஸுலுல் அஹ்காம் பக்கம்:294 பாகம்:6)

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் 
எனது நூலில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதைக் கண்டால், நபி (ஸல்) அவர்களின் வழி முறையையே (மக்களிடம்) கூறுங்கள்;, என் கூற்றை விட்டு விடுங்கள்.
(நூல்: அல்மஜ்மூஃ பாகம் – 1 பக்கம் – 63) 
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் 
இமாம் அபூஹனீஃபா, இமாம் மாலிக், இமாம் அவ்ஸாயீ ஆகியோரின் கருத்துக்கள் அவர்களின் அபிப்பிரயாமே. என்னிடத்தில் அவையனைத்தும் சமமே! உண்மையான ஆதாரமோ நபித்தோழர்களிடம் (உள்ள ஹதீஸ்களில்) தான் உள்ளது.   (நூல்: ஜாமிஉ இப்னு அப்தில்பர் பக்கம் 149 பாகம் 2)

 எதற்கெடுத்தாலும் மத்ஹபுகளை முன்னிருத்துவோர் மேற்கண்ட வரிகளை மீண்டுமொருமுறை ஆய்தறிவது அவசியமானது. இமாம்களின் சொற்கள் இதுவென்று வரையறையின்றி தெளிவில்லாதவற்றை நமக்கிடையில் வைத்திருக்கும் போது அந்த இமாம்களே அவை பின்பற்ற உகந்ததல்ல என்று தெளிவாய் சான்று பகீர்கிறார்கள். 

உண்மையாக மேற்கண்ட இமாம்களின் மீது மதிப்பு வைத்திருந்தால் அவர்களின் கூற்றுப்படி பின்பற்றுதல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் வார்த்தையிலும் அண்ணாலாரின் வாழ்விலுமே சாத்தியம் என்பதை உணர்ந்து அந்த தூய இமாம்கள் எதை பின்பற்றினார்களோ அந்த நபிவழி மத்ஹபை நாமும் பின்பற்றலாம் வாங்க....!

                          

முஸ்லிம்களும் ஊடகங்களும்


விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம் எனப் பலதுறைகளிலும் மனிதன் உச்சத்தை அடைந்து கொண்டே செல்கின்றான். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமெனில் மீடியா என்ற ஊடகத்துறை உலகில் அதிவேகமாகப் பரவியும் முன்னேறிக்கொண்டும் இருக்கின்றது. உலகளாவிய (Mass-Media) ஊடகங்களில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் குறிவைத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


இது போன்ற சூழலில் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மீடியா என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? அதில் முஸ்லிம்களின் நிலை என்ன? மீடியாவில் எவ்வாறு நாம் தாக்கத்தை ஏற்படுத்தலாம்? என்று எடுத்துரைத்து துயில் கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை விழிப்படையச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

மீடியா?
உலகத்தில் பரந்து இருக்கும் இதழியல்கள், தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படம், வீடியோ கான்ஃபிரன்சிங், இணையம், தனிநபர் பிரச்சாரம், வானொலி மற்றும் அலைவரிசைகள் எனப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் செய்திகள் மற்றும் இதற்குப் பயன்படும் தகவல் தொடர்புக் கருவிகள், ஜனசக்தி ஆகிய அனைத்தும் ஊடகம் (Media) என்ற கருத்தாக்கத்தில் அடக்கிவிடலாம்.

ஊடகங்களில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள், இஸ்லாம் எவ்வாறெல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதைச் சொல்லிமாளாது. மீடியாவில் இவ்வாறான தீயசக்திகளை அறிந்து ஈடுகட்ட வேண்டிய நிர்பந்தத்தில்தான் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

1) மீடியாக்களின் அவசியம்?
மீடியா ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் நிறை, குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. அதன் மூலம் அந்த நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வித்திட முடிகிறது. சில சம்பவங்களை எடுத்து அலசி, ஆராய்ந்துப் பார்த்தோமானால் மீடியாவின் அவசியம் என்ன என்பதை அனுமானித்துவிடலாம்.

சமீபத்திய ஈராக் போரை எடுத்துக்கொள்வோம், ஈராக்கின் பெட்ரோல் வளத்திற்கு ஆசைப்பட்டது அமெரிக்கா. அதை அபகரிக்க ஈராக்கை பயங்கரவாத நாடு என்று தன் ஆதரவு செய்தி ஊடகங்களான பி.பி.ஸி மற்றும் சி.என்.என் வழியாக உலகநாடுகள் மத்தியில் சித்தரித்தது. அணுஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்திருக்கின்றதா? என ஐ.நா நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அவ்வாறு இல்லை என்று உறுதிபடக் கூறியது. எனினும் ஐ.நா'வின் சொல்லையும் மீறி அமெரிக்கா தன் தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி (Veto-Power) ஈராக் மீது போர் தொடுத்தது. அப்போது ஈராக்கை பலஹீனப்படுத்த முதன் முதலில் அமெரிக்கா தன் ஏவுகனைகளை ஈராக்கின் தகவல்தொடர்புக் கட்டிடத்தின் மீது வீசி அதை முற்றிலுமாக அழித்தது. காரணம், ஈராக்கினுள் தான் நடத்தப்போகும் அராஜக மனித மீறல்கள் உலகத்திற்குத் தெரிந்து விடக்கூடாது என்று மீடியாக்களின் வாசல்கள் அனைத்தையும் அடைத்தது.

ஈராக்கில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்தது அமெரிக்கா. இச்செய்திகளை அல்-ஜஸீரா மற்றும் சில இணைய ஊடகங்கள் வெளியுலகிற்குக் கொண்டு வந்தபோது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மக்கள் கூட மனிதநேய அடிப்படையில் அமெரிக்காவை எதிர்த்துப் போர் நிறுத்தம் செய்யக் கூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் அப்பாவி முஸ்லிம்களை கைதிகளாக்கி சிறையில் அடைத்தனர். அவர்களை நிர்வாணப்படுத்தி ஒருவரோடு ஒருவராகப் பிணைத்துப் போட்டனர். ஈராக் முஸ்லிம்கள் மீது மின்சார அதிர்வுகள் கொடுத்தும், கற்பழிப்புகள் நடத்தியும் கொடுமைப்படுத்தினர். இவையெல்லாம் இணைய ஊடகங்கள் வாயிலாகக் கடந்த ஏப்ரல் 2004-ல் புகைப்படங்களாக வெளிவந்த போது, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ் பெல்ட் இத்தகைய இராணுவ வரம்புமீறல்களுக்கு மன்னிப்புக் கோரினார். இழந்த உடமைகளும், உயிர்களும் இவரின் மன்னிப்பின் மூலம் மீட்டிட முடியுமா? இல்லை!

இதே போன்று பாலஸ்தீனிய முஸ்லிம்கள் தங்கள் சொந்த மண்ணில் இஸ்ரேலிய யூத மக்களால் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் என்ற இல்லாத ஒரு நாட்டை யூதர்கள் திட்டமிட்டு பாலஸ்தீனில் உருவாக்கிவிட்டார்கள். இவ்விஷயத்திலும் ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இன்றளவும் செயல்பட்டு வருகின்றன. வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான போர்கள் அரங்கேறியே வருகின்றன.

சமீபத்திய குஜராத் கலவரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், மோடி அரசின்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், முஸ்லிம்களின் சொத்துக்கள் மதவெறி பிடித்தவர்களால் சூரையாடப்பட்டன.

குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் அநியாயமான முறையில் தடாக் கைதிகளாகவும், பொடாக் கைதிகளாகவும் கைது செய்யப்பட்டு விசாரணை மரபு மீறலையும் தாண்டி மயக்கமருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்தனர். விசாரணை என்ற பெயரில் சித்தரவதை செய்யப்பட்டனர். இச்செய்திகளை மீடியாக்கள் வெளியுலகத்திற்குக் கொண்டுவந்த போது உலகநாடுகள் குஜராத் சம்பவத்தை விமர்சித்தன. இந்தியாவிற்கு ஏற்பட்ட தலைகுனிவு குஜராத் சம்பவம் என எல்லோரும் கூறினர். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் எந்த முகம் கொண்டு இனி நான் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வேன் என்று கூறினார். மீடியாவின் மூலமாக இச்சம்பவங்கள் வெளிவராமலிருப்பின் இன்னும் முஸ்லிம் சமுதாயம் நசுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
மாற்று மதத்தில் ஒருவன் தவறு செய்தால் அதை அவனளவிலும், முஸ்லிம் ஒருவன் தவறு செய்துவிட்டால் அதை இஸ்லாத்தோடு இணைத்தும் செய்திகளை வெளியிடுவது முஸ்லிம்களுக்கு எதிரான மீடியாக்களுக்கு கைவந்த கலை. முஸ்லிம்கள் என்றால் வன்முறைகளைத் தூண்டுபவர்கள், தீவிரவாதிகள் என்று மாற்றார்கள் கூறும் மனோநிலைக்கு மீடியாக்கள் மக்களை மாற்றியிருக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகளும், வன்முறைகளும் ஒருபுறம் என்றால் ஊடகங்களின் வாயிலாக இஸ்லாத்தின் மீது நடத்தப்படும் அவதூறான பிரச்சாரங்கள் மற்றொருபுறம். குர்ஆன், ஹதீஸ்களை திரிப்பதும், இஸ்லாமிய ஷரீயத் சட்டங்கள் நடைமுறைக்கு ஒவ்வாது, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, பர்தா முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது என்றெல்லாம் போலிப்பிரச்சாரங்கள் ஊடகங்களின் மூலமாக நடத்தப்படுகின்றன.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை, திருமணங்கள், போர்கள் ஆகியவைகளை தவறானமுறையில் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. எந்த அளவிற்கு என்று சொன்னால் அவர்களின் சூசகமான கருத்துக்களின் மூலம் பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் கூட நாத்திகவாதியாக மாறிவிடுமளவிற்கு அவர்களின் மொழிப்புலமை கொண்டும், வாதத் திறன் கொண்டும் இஸ்லாத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள்.

உலக அளவில் முஸ்லிகள் பொட்டுப் பூச்சிகளைப் போல அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் வரலாறுகள், தியாகங்கள் எல்லாம் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது. பள்ளிகளில் பயில வரும் பிஞ்சுகளின் உள்ளங்களிலும் முஸ்லிம்கள் தீயவர்கள் என்ற நஞ்சை விதைக்கின்றனர். பாடதிட்டங்களில் தங்கள் மதக் கொள்கைகளைத் திணிக்கின்றனர். காவல் துறை, இராணுவம், அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றார்கள். மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களில் வகுப்பு வெறி ஊடுறுவிவிட்டது. முஸ்லிம்கள் விரும்பாத தலைமைகளை மீடியாக்கள் மூலம் மக்கள் சக்தியை உருவாக்கி முஸ்லிம்கள்பால் சுமத்துகின்றன. நாம் மீடியாவில் அவசியத்தை உணராமலிருப்பதன் விளைவுதான் இத்தகைய தீய பலன்களை அடைய வேண்டியுள்ளது.

2) மீடியாவில் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதன் காரணங்கள்?
இந்திய முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க ஆங்கிலம் கற்பது ஹராம் என்று கல்வி கற்க மறந்துவிட்டனர். ஆரம்பகாலத்தில் அரபி மொழி அறிந்தோர் பிறமொழியை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டாதது, இன்றளவும் அரபியர்களிடத்தில் இவ்வழக்கம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. பிற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு நிலை.

ஒவ்வொரு நவீனக் கண்டுபிடிப்புகள் வந்தபோதெல்லாம் அதைத் தீய வழியில் பலர் பயன்படுத்துவதைக் கண்டு அஞ்சி முற்றிலுமாக அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இன்றளவும் டி.வி இல்லாத பல இஸ்லாமிய இல்லங்கள் இருக்கத்தான் செய்கின்றன. டி.வி'யை எவ்வாறெல்லாம் நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்பதை அறிய முற்படாமல் டி.வி பார்ப்பது ஹராம் என்ற மார்க்கத் தீர்ப்பையும் வழங்கினர். வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது ஹராம் என்றும் கூறினர். அதை எவ்வாறு சமுதாய வளர்ச்சிக்கும், மார்க்க வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் என்று ஆமை வேகத்தில் அறிந்துகொண்டதன் பின்தான் ஆடியோ, வீடியோ, சி.டி, டி.வி.டி என பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

திருக்குர்ஆனையும், நபிகளாரின் போதனைகளும் ஆரம்பகாலத்திலேயே மொழியாக்கம் செய்ய மறந்துவிட்டனர். மாறாக முன்னோர்களின் கட்டுக்கதைகளை கையிலெடுத்துக்கொண்டு இதுதான் மார்க்கம் என்று பிரச்சாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டதால் இஸ்லாம் அதன் தூயவடிவில் பலருக்கு கிடைக்காமல் சென்றுவிட்டது. இவ்வகையான முன்னோர்களின் திரிபு பெற்ற நூல்கள், பிரச்சாரங்கள் மீடியாவில் சரிகட்டவியலாத பின்னடைவை ஏற்படுத்திவிட்டன.

முஸ்லிம்கள் கல்வியில் ஆர்வம் காட்டாதது, புதிய கண்டுபிடிப்புகளை உடனே ஏற்க மறுத்தது, குர்ஆன், ஹதீஸ்களை தெளிவுபடுத்த மறந்தது, மார்க்கப் பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் பாதியேனும் சமுதாய வளர்ச்சிக்குக் கொடுக்காதது, தான் உண்டு தன் வேலையுண்டு என்ற பிற்போக்கு மனப்பான்மை என்று முஸ்லிம்கள் மீடியாவில் பின்தங்கிப்போனதன் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். பொதுவாக முஸ்லிம்கள் ஊடகங்களில் பின் தங்கியிருப்பது அனைவரும் ஏற்றாக வேண்டிய கூற்று. எனவே இதை விரிவாக அலசுவதை விடுத்து ஊடகங்களில் நாம் எவ்வாறு முன்னேறலாம் என்பதை ஆய்வு செய்வோம்.

3) முஸ்லிம்கள் மீடியாக்களை எவ்வாறு பயன்படுத்தலாம்?
நவீன கண்டுபிடிப்புக்களைத் தூரநோக்கு பார்வை கொண்டு அங்கீகரிக்கவேண்டும். அதன் மூலம் முஸ்லிம்களுக்கு ஆதரவான மக்கள் சக்தியை உருவாக்க முஸ்லிம்கள் பாடுபடவேண்டும். மீயாக்களில் முஸ்லிம்கள் தாக்கத்தை ஏற்படுத்த பலவழிகள் உள்ளன, அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிட்டுப் பார்ப்போம்.

கல்வியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சிக்கு அடிகோலிடும்.
கல்வி கற்பதில் முஸ்லிம்கள் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டாத நிலை. மனித அறிவின் பிறப்பிடம் கல்வி என்பதை ஏனோ முஸ்லிம்கள் மறந்துவிட்டார்கள். எழுத்தறிவில் மிகவும் பின்தங்கிய சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில் கற்றறிந்த மாற்றார்கள் முஸ்லிம் சமுதாயத்தை ஊடகங்களின் வாயிலாக நசுக்குகிறார்கள். ஊடகங்களை எதிர்கொள்ள முஸ்லிம் சமுதாயத்தை கல்வியில் முன்னேற்றமடையச் செய்யவேண்டும். வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் ஆன்லைனில் கல்விகற்கும் நிலை நிலவிவருகின்ற சூழலில் முஸ்லிம்களுக்கு என்று எத்தனை கல்வி நிலையங்கள் இருக்கின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் கல்விக்கூடங்களை நாம் வைத்திருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். பணம்படைத்த முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் அதற்கான வாய்புகளும் வசதிகளையும் ஏற்படுத்திட முன்வர வேண்டும். கற்றறிந்தவர்கள் அனைவரும் இதற்காகப் பாடுபடவேண்டும்.

கல்வியை மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று பிரிக்காமல் இரண்டும் இணைந்து கிடைக்கப் பாடுபடவேண்டும். கல்வியில் பின்தங்கியதால் மீடியாவில் மட்மல்லாது அரசு வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவற்றிலும் நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். மீடியாவில் முஸ்லிம்கள் முன்னேறுவதற்கு கல்வியில் முன்னேற்றம் மிகஅவசியம்.

இதழியல் மற்றும் மொழியியல் முன்னேற்றம்.
இதழியல்(Journalism) என்பது வாரஇதழ்கள், மாதஇதழ்கள், தினசரி செய்திப் பத்திரிக்கைகள் மற்றும் எழுத்து வடிவில் மக்களைச் சென்றடையும் அனைத்து ஊடகங்களும் இதில் அடங்கும். எந்த ஒரு உலகச் செய்தியை நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனினும் மாற்றார்களிடத்தில் உள்ள ஊடகங்களைத்தானே அணுகவேண்டிய சூழல் நிலவிவருகிறது. உதாரணத்திற்கு தமிழில் முஸ்லிம்களால் நடத்தப்படும் தினசரிச் செய்தித்தாள் ஏதேனும் உண்டா? வேதனைக்குரிய விஷயம் முஸ்லிம்களில் திறமையான எழுத்தாளர்கள் மிகமிகக் குறைவு. பத்திரிக்கைத் துறையில் நமது சமுதாயம் முன்னேற்றம் காணவேண்டும். கருத்துக்கள் என்னவாக இருந்தாலும் அதைச் சீரிய முறையில் எடுத்துரைக்க மொழி என்ற ஊடகம் அவசியமாகிறது. எனவே மொழியை அதன் இலக்கிய, இலக்கண அறிவோடு அறிதல் வேண்டும். ஆங்கிலம் என்பது உலகில் அதிகமானோரால் பேசப்பட்டு வரும் மொழி, எனவே அவற்றையும் நாம் கற்றறிய வேண்டும்.

பட்டப் படிப்புகளில் இதழியலும் ஒரு பிரிவு. இதில் முஸ்லிம்கள் ஆர்வம் செலுத்திப் படித்து திறமையான எழுத்தாளர்களாக மாறவேண்டும். மீடியாவில் நம் சமுதாயம் முன்னேற திறமையான எழுத்தாளர்கள் பலர் உருவாக (உருவாக்க) வேண்டும். அதன் மூலமாக கணிசமான முறையில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் ஊடகங்களில் வெற்றியைக் காணும்.

தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலி அலைவரிசைகள்.
எந்த ஒரு செய்தியும் எழுத்துவடிவில் மக்களைச் சென்றடைவதை விட காட்சி ஊடகமான (Visual-Media) தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படங்கள், குறும்படங்கள் (Documentery - Films) போன்றவற்றின் மூலமாக விரைவாகச் சென்றடைந்துவிடும். காட்சியோடு செய்திகள் மக்களைச் சென்றடையும் போது மக்கள் மனதில் அச்செய்திகள் பதியும். இவ்வகையான ஊடகங்களில் முஸ்லிம்கள் இப்போதுதான் தலைகாட்டியுள்ளார்கள். உலக அளவில் முஸ்லிம்களுக்கு சில அரபி சேனல்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் முஸ்லிம்களுக்கு என்று ஒரு சேனல் உண்டா எனில் இல்லை.

பி.பி.ஸி மற்றும் சி.என்.என் போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்கள் உலக அரங்கில் அதிகமானோரால் முஸ்லிம்கள் உட்பட கவரப்படுவதற்குக் காரணம் அவை அறிவியல் செய்திகளை ஆய்வுசெய்து தருகின்றன, மருத்துவச் செய்திகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதேயாகும்.

இத்தனை காலம் கழிந்து டாண் மியூசிக் சேனலில் தமிழில் இஸ்லாமியர்களின் நிகழ்ச்சி தினமும் ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகின்றது என்பது வியப்புக்குரிய செய்தி. அத்தகைய சேனல்களும் முஸ்லிம்களுக்குச் சொந்தமா? எனில் அதுவும் இல்லை. ஆடல், பாடல், இசை, பொழுதுபோக்கு என்று எடுத்துக்கொண்டால் எண்ணற்ற தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள்.

இத்தகைய ஊடகத்தை முஸ்லிம்கள் பயன்படுத்த முன்வரவேண்டும். இஸ்லாத்தை எத்திவைப்பதோடல்லாமல் முஸ்லிம் சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள், சமுதாய வளர்ச்சி, சேவை போன்ற நல்ல நோக்கங்களுக்கு இத்தகைய ஊடகங்களில் சரித்திரம் படைக்கவேண்டும். தொலைக்காட்சி, திரைப்படம், குறும்படம் (Documentery) என்று போனால் இசை, ஆடல், பாடல், கவர்ச்சி மற்றும் கமர்ஷியல் இல்லாமல் முடியுமா? என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருக்காமல் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் இருந்துகொண்டு இத்தகைய ஊடகங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைச் சிந்தித்துப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

தனிநபர் பிரச்சாரங்கள், மேடை நாடகங்கள், கருத்தரங்குகள், ஜும்மாப் பேருரைகள்.
இவையாவும் மக்களைச் சென்றடையும் ஊடகங்களே! இவற்றின் மூலமாகவும் மக்கள் சக்தியை உருவாக்கிட முடியும். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை மட்டும் போதித்துச் சென்றுவிடாமல் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அம்சங்களும் கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். காலத்திற்குத் தகுந்தாற்போல் அவர்கள் வெள்ளிமேடைகளில் (குத்பாப் பேருரைகள்) பிரச்சாரங்கள் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம் நாடுகளில் பெருவாரியான முஸ்லிம்கள் ஒன்று குழுமக் கூடிய வெள்ளிக்கிழமை பேருரைகள் அரபி மொழியிலேயே சடங்குக்காக நடந்து வருகின்றன. நம்மில் பலரும் அதைப் பக்தியோடு கேட்டு துயில் கொண்டு செல்கிறோம். இன்றைய முஸ்லிம் சமுதாயம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது, சமுதாயத்தில் படர்ந்துவிட்ட களங்கங்கள் என்ன? மார்க்கத்தை எவ்வாறு நிலைநாட்டலாம் என உணர்ந்து இந்த குத்பாப் பேருரைகள் அமைந்தால் அதுவும் மீடியாவில் மகத்தான வெற்றிதான்.

பொழுதுபோக்கிற்காக எத்தனையோ அம்சங்கள் வந்துவிட்டன. ஆனால் பொழுதுபோக்கிலும் உபயோகமுள்ள ஒரு கருத்தை வலியுறுத்தி பிரச்சாரங்கள், மேடை நாடகங்கள், கருத்தரங்குகள் நடத்துதல் அவசியம். இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலமாகவும் மீடியாவின் கவனத்தை திசைதிருப்ப முடியும். மார்க்கப் பிரச்சாரங்கள், தொழுகை, இபாதத் போன்றவற்றிற்கு மட்டும் முஸ்லிம்கள் ஒன்று திரளக்கூடியவர்களாக இருந்த நிலை மாறி பாபர் மசூதி பிரச்சனை, வாழ்வுரிமை மாநாடுகள், அரசியல் மேடைகள், மதமாற்ற தடைச் சட்டம், லாட்டரி ஒழிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் தற்போது ஒன்று குழுமக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். எனினும் மீடியாவில் நாம் சொல்லக்கூடிய அளவில் முன்னேற்றம் கண்டுவிடவில்லை. எனவே நவீன மீடியாக்களைப் பயன்படுத்தி காலத்திற்கேற்றாற் போல செய்திகளை மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

இணையம் (Internet).
இணையம் என்பது உலகத்தின் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இணைத்துவிடுகிறது. டாட்காம், வெப்காம், பிளாக், இ-மெயில், சாட்டிங், டேட்டிங், ஃபாரம், ஆன்லைன் என்று உலக மீடியாக்களில் இணையம் இமாலய முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கின்றது. நம் சமுதாய மக்களோ இன்னும் கம்ப்யூட்டர் என்றால் என்ன? சாஃப்ட்வேர் என்றால் என்ன? ஹார்ட் வேர் என்றால் என்ன? என்று கணினி பற்றிய உபயோகம் குறித்து அறியாமலே இருக்கிறார்கள். கணிப்பொறி மற்றும் இணையத்தின் பயன்பாடுகளைக் கொண்டு முஸ்லிம்கள் ஊடகங்களை வலுவடையச் செய்யலாம். கணினி மற்றும் இணையத்தின் எல்லாப் பயன்பாடுகளும் தமிழிலேயே அறிந்துகொள்ள மென்பெருட்கள் வந்துவிட்டன. கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் என்ற ஊடகங்களின் பயன்பாடுகள் அறிந்து முஸ்லிம்கள் இவ்வாறான மீடியாக்களைப் பயன்படுத்த முன்வருதல் வேண்டும்.

ஒற்றுமை என்ற பண்பு மீடியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
முஸ்லிம்கள் மீடியாவில் தாக்குப்பிடித்து மேற்கண்ட வழிகளில் முன்னேற ஒற்றுமை என்ற பண்பை முன்நிறுத்தியாக வேண்டும். உலக அளவில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் ஒருமித்த கருத்தில் இருந்தால் அமெரிக்காவை எதிர்கொள்ள முடியாதா? ஊரளவில் முஸ்லிம்கள் ஜமாஅத்களாகவும், அமைப்புகளாகவும் பிரியாமல் ஒன்றுபட்டால் பெரிய மக்கள் சக்தியை உருவாக்க முடியாதா? கண்டிப்பாக முடியும். அப்போதுதான் மீடியாவின் மூலமாக சிறந்த செயல் திட்டங்கள் உருவாக்கமுடியும். பொருளாதாரத்தைச் சரிகட்டி நடைமுறைப்படுத்தவும் முடியும். இதை முஸ்லிம் சமுதாய மக்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.

எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 8:53)

எல்லாம் வல்ல அல்லாஹ் தூய இஸ்லாத்தையும், அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் மீடியாவில் மட்டுமல்லாது எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடையச் செய்வானாக. – ஆமீன்.

தற்கொலை செய்து கொண்டவருக்காகப் பிரார்த்திக்கலாமா?


முஸ்லிம்களுக்கு இந்த உலகம் ஒரு சோதனைக்கூடமாகும். இதில் வசிக்கும் மாந்தர்கள் இவ்வுலக வாழ்வு எனும் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டுச் சோதிக்கப்படுவார்கள். துன்பங்களைக் கண்டுத் துவண்டு போகாமலும், துயரங்களால் முடங்கிப் போகாமலும் இறைவனின் கருணையை எதிர் நோக்கிப் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் ஒரு முஸ்லிம் இறைவனைச் சார்ந்தே நிற்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் நிரந்தரமல்ல. இவ்வுலக வாழ்வைப் பொறுத்தவரை அதனை இறைவன் கொசுவின் இறக்கைக்குத் தான் ஒப்பிடுகிறான். மறுமையின் நிலையான வாழ்வுக்கு முன்னால் அற்பமான இம்மை வாழ்வில் வரும் துன்பங்களையும் துயரங்களையும் கண்டு சஞ்சலம் அடையாமல் இறைவனின் உதவியை மட்டுமே எதிர்பார்த்து ஒரு முஸ்லிம் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அதனால் எந்தவொரு சோதனைக்கும் தற்கொலையைத் தீர்வாக இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை. மாறாக தற்கொலை செய்வதை வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கம் இஸ்லாம்.

'ஒரு மனிதருக்குக் காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ், ''என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான், எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 1364)

மேற்கண்ட புகாரி. 1364வது ஹதீஸைப் போன்றே காயத்தின் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகக் கீழ்வரும் (3062, 4204) கைபர் போர் சம்பவத்திலும் சொல்லப்படுகிறது. 

நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போது தம்முடன் இருந்தவர்களில், தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைப் பார்த்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவர் நரகவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது, அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அவருக்கு நிறையக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. மக்களில் சிலர், (நபி-ஸல் அவர்களின் அச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அப்போது அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணர்ந்தார். எனவே, தம் அம்புக்கூட்டுக்குள் கையை நுழைத்து, அதிலிருந்து அம்புகளை எடுத்து, அவற்றால் தம்மை அறுத்துக் கொண்டு தன்னை மாய்த்துக் கொண்டார். (அதைக் கண்ட) முஸ்லிம்களில் சிலர் விரைந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் சொன்னது உண்மை தான் என அல்லாஹ் உறுதிப்படுத்திவிட்டான். இன்ன மனிதர் தன்னை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார்'' என்று கூறினர். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இன்னாரே! நீங்கள் எழுந்து சென்று (மக்களிடையே), 'இறைநம்பிக்கையாளரைத் தவிர (வேறெவரும்) சொர்க்கத்தில் நுழைய முடியாது, அல்லாஹ், இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்'' என்று பொது அறிவிப்புச் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். (புகாரி, 3062, 4204)

மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 1365, 5778)

தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் கூறுவதால், தற்கொலை செய்தவருக்காக மறுமையின் பலன் வேண்டிப் பிரார்த்தனை செய்வதிலும், அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதிலும் எவ்விதப் பயனும் இல்லை என்றறிக! அல்லாஹ் அப்படிப் பட்டதொரு மாபெரும் பாவத்தில் வீழாமல் நம் அனைவரையும் காத்தருள்வானாக!

புகை நமக்குப் பகை


நீங்கள் உங்களையே கொலை செய்துக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)
இஸ்லாத்தில் தற்கொலை செய்துக் கொள்வது நிரந்தர நரகத்தைத் தேடித்தரும் பாவம் என்பதை அனைவரும் அறிந்ததே. இன்று விஷம் சாப்பிட்டு நாளை இறந்து போனாலும் அதை தற்கொலையாகவே நாம் கருதுவோம். அதே போல மெதுவாக கொல்லக்கூடிய விஷம் (Slow poision) சாப்பிட்டு வாரம், வருடம், 10 வருடம் அல்லது 30 வருடம் சென்று இறந்து போனாலும் நாம் இதை தற்கொலையாகவே கருதுவோம். சிகரெட் புகைப்பதால் மனிதன் தன் வாழ்நாளை மிகப்பெரிய அளவில் குறைத்துக் கொள்கின்றான் என்பது விஞ்ஞானத்தில் நிறூபிக்கப்பட்ட உண்மை.
ஆனால் நின்று கொல்லக் கூடிய சிகரெட், இஸ்லாமிய சமுதாயத்திலும் மற்றவர்களிடமும் புத்துணர்வு ஊட்டும் மருந்தாக கருதப்படுவதுதான் விந்தையிலும் விந்தை. எனவே மனித சமுதாயத்தில் குறைந்தது ஒரு நபரையாவது இக்கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.
சிலர்களது கருத்து சிகரெட் புகைப்பதால் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும் என்பதும் வேலையின் பளு தெரியாமல் இருக்கும் என்பதும் வேலையை உற்சாகமாக செய்ய உதவும் என்பதாகும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இது ஒரு நவீனக் கலாச்சாரம் என நினைக்கிறார்கள். ஒரு சிகரெட் பலர் பகிர்ந்து தங்கள் சகோதரத்துவத்தை(?!) வெளிப்படுத்துகிறார்கள். பசித்தவனுக்கு உணவு கொடுக்கிறார்களோ இல்லையோ சிகரெட் தேவைப்படுபவனுக்கு தாராளமாக பாக்கெட்டை நீட்டுகிறார்கள். குறிப்பாக தேர்வு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்துப் படிக்க புகைப்பழக்கம் ஒரு பக்கபலம் என்று நினைப்பவர்கள் அதிகம். இன்னும் சிலர் காலையில் இது இருந்தால்தான் மற்ற கடமைகள் என்கிறார்கள். இவையெல்லாம் மனதளவில் ஏற்படும் மாயை என்பதில் இவர்களுக்கே சந்தேகமில்லை. இவர்கள் தெரிந்து கொண்டே தங்களை அழிவின் பக்கம் தங்களை நகர்த்துகிறார்கள்.
நான் செயின் ஸ்மோக்கர் என்றும் நாளொன்றுக்கு எனக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் வேண்டும் என்று சிலர் பெருமையாகக் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ நான் நினைத்தால் இப்பழக்கத்தை இன்றே நிறுத்திவிடுவேன், நான் ஒன்றும் இதற்கு அடிமையல்ல ஏதோ ஓய்வு நேரத்தில் மன ஆறுதலுக்கு புகைக்கின்றேன் என்கிறார்கள். உண்மையில் இவர்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமைகளே.
இது போன்ற புகைப்பழக்கத்திற்கு பலர் அடிமையாவதற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்தவர்கள் யார் என ஆராய்ந்தால் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறை என்று கூறலாம். புகைபிடிப்பதால் உற்சாகமாய் சண்டையிடும் காட்சிகள், புகைப்பிடிப்பதைக் கண்டு காதல் வயப்படும் பெண்கள், சோக மற்றும் சந்தோஷ சந்தர்ப்பங்களில் புகைப்பிடித்தல் சம்மந்தப்பட்ட காட்சிகள் போன்றவை சின்னத்திரையும் வெள்ளித்திரையும் தவறாமல் இடைச்செருகல் செய்ததன் விளைவு 15 முதல் 19 வயது வரையுள்ளவர்களின் மனதில் புகைப்பழக்கம் ஒரு சிறந்த பழக்கம் என்ற தாக்கத்தை மறைமுகமாக ஏற்படுத்துகிறது.
இதனால் ஆரம்பத்தில் ஜாலிக்காக ஆரம்பிக்கின்ற ஒருவர் காலப்போக்கில் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார். இப்பழக்கத்திற்காக ஒரு தொகையை தினமும் செலவழிக்கின்றார். இப்பழக்கம் சற்று அதிகமாகி போதைப் பொருட்களைத் தேட ஆரம்பிக்கின்ற சிலரும் உண்டு. சமீப காலங்களாக போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் அதிகமாக கைது செய்யப்படுகின்ற இடம் கல்லூரி வாசல்களாகவே இருக்கின்றன. இனியாவது தணிக்கைத்துறை சினிமாவில் இது போன்ற காட்சிகளையும், விளம்பரங்களையும் தடை செய்யது வருங்கால இளைஞர் சமுதாயத்தை ஆரோக்கியமான சமுதாயமாக வளர வழி வகுக்கட்டும்.
இத்தீய புகைபழக்கத்தின் காரணமாக தான்மட்டும் தீமையைத் தேடிக்கொள்ளாமல் 'யான் பெற்ற இன்பம்(?!) பெறட்டும் இவ் வையம்' என்பதற்கினங்க அருகில் இருப்பவருக்கும் அதைப் பகிர்ந்தளிக்கிறான். இதைத் தடுக்க தமிழக அரசு உள்பட பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகள், பேருந்துகள், வணக்கத்தலங்கள், ரயில்வே சந்திப்புகள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில், புகைத்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவித்திருக்கிறது. எனினும் இந்த அரசுகள் சிகரெட் விற்பனைக்குத் தடைவிதிக்க முன்வராததன் நோக்கம் என்னவென்று பார்த்தால் அரசு கஜானாவை அதிகமாக நிரப்புவதில் புகையிலைச் சுங்கவரி பெரும்பங்களிப்பதே ஆகும்.
விற்பனைக்குத் தடைவிதித்தால் அதன் உற்பத்தியாளர்களும், விற்பனைதாரர்களும் மற்றும் அதையே தொழிலாக மேற்கொண்டு வாழ்வை நடத்திவரும் மக்களும் சாலைமறியல், உன்ணாநோன்பு போன்ற போராட்டங்களில் இறங்குகிறார்கள். வீர வசனங்களை தேர்தல் அறிக்கைகளாக வெளியிடும் அரசியல் வாதிகள் உயிர்களை அழிக்கும் இத்தொழிலை முடக்கி ஆக்கப்பூர்வமான பல தொழிற் சாலைகள் திறக்க முன் வருவார்களா?
கருத்துக்களும் ஆய்வுகளும்
உலக சுகாதார மையம் (World Helth Organization) கருத்தாய்வு ஒன்று கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது, தற்போது உலகத்தில் ஆண்டொன்றுக்கு 4 மில்லியன் மக்கள் இக்கொடிய கேன்ஸர் நோயால் இறக்கின்றனர். இது வருங்காலத்தில் கி.பி. 2025 வாக்கில் 10 மில்லியனாக மாறலாம். இக்கொடிய நோயுக்கு முதல்காரணமே புகைப்பழக்கம் தான் என்கிறது.
2050-ஆம் ஆண்டு வாக்கில் எய்ட்ஸின் மூலம் எவ்வளவு மக்கள் இறக்க நேரிடுமோ அதேபோன்று இந்த கேன்ஸர் மூலமும் இறக்க நேரிடும் என்கிறார்கள். தாய்லாந்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உலக சுகாதார மையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கும் விஷயம் தற்போது மட்டும் உலகில் 250 மில்லியனுக்கும் அதிகமாக குழந்தைகள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிய நாடுகளானது புகையிலை இறக்குமதி செய்வதில் முன்னிலை வகுக்கின்றன.
புகைப்பிடித்தல் விளைவாக ஏற்படும் இதய நோய்களால் ஆண்டுதோறும் 600,000-க்கும் மேலான மக்கள் அமெரிக்காவில் மட்டும் மரணிக்கின்றனர். வருடத்திற்கு 150,000 பேர் நுரையீரல் சம்பந்தப்பட்ட புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறார்கள்.
சீனாவில் ஆராய்ச்சிக் கழகம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் 70 சதவீதம் ஆண்கள் புகைபிடிப்பவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவர்களாகவே உள்ளனர். சீனாவில் சுமார் 30 வயதுகளில் இறப்பவர்களில் மூன்றில் ஒருவர் புகைபிடிப்பதால் ஏற்படும் கேன்ஸர் நோய் பாதிக்கப்பட்டு இறப்பவராகவே உள்ளார்.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் புகைபிடிக்கும் ஆண்களைப் போன்று பாதியளவு பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர். தாய்லாந்தில் இருக்கும் 80 சதவித புகைபிடிப்பவர்கள் தங்கள் 20 வயதுக்கு முன்பே இப்பழக்கத்தை ஆரம்பித்ததாக சொல்கிறார்கள்.
பெருவாரியான நகரங்களில் புற்றுநோய் மையங்கள் பரவலாகத் தோன்றுவதற்குக் காரணம் கேன்ஸர் பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகரிப்பதேயாகும். யார் ஒருவர் நாளொன்றுக்கு 15 முறைக்கும் மேல் புகைக்கின்றாரோ அவர் பிற்காலத்தில் இதுபோன்ற புற்று நோய் மையத்தில் நோயாளியாக சேர்க்கப்படுவார், என மருத்துவ வட்டாரங்கள் அறிவிக்கின்றன. கேன்சரின் ஒருவகை பாதிப்பைத்தான் கீழ்கண்ட படத்தில் பார்க்கிறீர்கள்.
நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி இதெல்லாம் அறவே தவிர்க்கணும். மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.
நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது!
பி.பி.ஸி செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது, இங்கிலாந்தில் புகைப்பிடிக்கும் 30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் ஆண்மையிழந்தவர்களின் எண்ணிக்கை 120,000. பெரும்பாலானோர் இதை அறியாமலே செய்கிறார்கள். மேலும் அதிகமாகப் புகைபிடிப்பவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் ஆரோக்கியமற்ற நிலையிலேயே பிறக்க நேரிடுகின்றன.
புகைப்பழக்கமும் ஆரோக்கியத்தின் பாதிப்பும்
புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு பல எதிர்விளைவுகளை உண்டாக்குகின்றது. இதயம் பாதிப்பு, புற்று நோய், நுரையீரல், முகத்தோல் சுருக்கம், குடலில் ஏற்படும் அல்சர், பற்களில் பாக்டீரியாக்களின் தாக்குதல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்பு, ஆண்மையிழப்பு, இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு புகைப்பழக்கம் காரணியாக அமைகிறது.
மனிதன் பிறந்தது முதல் இறக்கின்ற வரை எந்த ஓய்வும் எடுக்காமல் இடைவிடாது வரையறுக்கப்பட்ட விதத்தில் அனிச்சையாக இயங்குகின்ற உறுப்புகள் எனப் பார்த்தால் நுரையீரல் மற்றும் இதயம். புகைப்பழக்கத்தின் மூலம் முதலில் பாதிப்புக்குள்ளாவதும் இவையேதான்.
நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer)
புகைபிடித்தலினால் முதலில் பாதிப்படையும் பகுதி நுரையீரல் தான். காற்றை உள்ளிழுப்பதால் நுரையீரல் விரிந்தும், வெளியிடுவதால் சுருங்கியும் செயல்படுகிறது. ஆக்ஸிஜனை கிரகித்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறது. புகைபிடிப்பதால் காற்றுடன் சேர்ந்து வரும் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் மோனாக்ஸைடு துகள்கள் நுரையீரல் பகுதியில் படிந்து கட்டிகளாக மாறுகிறது. இதனால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு காசநோய் (Tuber Classes) ஏற்படுகிறது. காலப்போக்கில் நுரையீரல் ஜவ்வுகளில் சிறிய துளைகளை இக்கட்டிகள் ஏற்படுத்துகின்றன. ஆக்ஸிஜனை உட்கிரகிக்கும் சிறிய பைகளில் துளைகள் ஏற்படுத்தும் இந்நோயை (Pulmonary Emphysema) என்று அழைக்கின்றனர். இந்நோயிற்கான அறிகுறிகள் உடல் இளைத்தல், தூக்கமின்மை, காசம், வாழ்வில் தன்னம்பிக்கை இழைத்தல் ஆகியவை என்று மருத்துவ நிபுணர்களின் ஆய்வு குறிப்பிடுகிறது.
இரத்தப் புற்றுநோய் (Blood Cancer)
நுரையீரலுக்குள் வரும் காற்றுதான் இதயத்திற்குச் சென்று ரத்தத்தைச் சுத்தம் செய்து ஆரிக்கிள்ஸ், வெண்ட்ரிகிள்ஸ் மூலமாக சுத்த இரத்தத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பம்ப் செய்கிறது. புகைப்பதினால் ஆக்ஸிஜனோடு கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு ஆகியவை சுத்தமான ரத்தத்தோடு கலக்க நேரிடுகிறது. இதன் விளைவு இதயத்துடிப்பு சாதாரண நிலையிலிருந்து சற்று அதிகரிக்கிறது. கார்பன்-டை-ஆக்ஸைடை விட கார்பன் மோனாக்ஸைடின் விஷத்தன்மை அதிகமாகும். புகைபிடிப்பதால் இந்த விஷவாயுவானது நுரையீரல் மூலமாக இரத்தத்தில் கலக்கிறது. இது ஆக்ஸிஜன் பரவுவதைவிட அதி விரைவாக இரத்த நாளங்கள் மூலமாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவுகிறது. ஆக்ஸிஜனின் அடர்த்தியை விட கார்பன் மோனாக்ஸைடின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் இரத்தத்திலுள்ள செல்களைச் சுற்றி இது படர்கிறது. இது போன்ற பாதிக்கப்பட்ட செல்கள் பிளவுபட்டு பிளவுபட்டு கட்டிகளாக உருவாகிறது. இக்கட்டிகளை முற்றிலுமாக அறுவை சிகிச்சைகள் மூலம் நீக்குவது மிகவும் சிரமமான ஒன்று. நவீன கதிர்வீச்சு முறையில் இதை அழித்தல் என்பது அதிகப்படியான செலவுகளுக்கு வழிவகுக்கும்.
எலும்புருக்கி நோய் - லூக்கேமியா (Leukemia)
மனிதனின் ஒரு துளி இரத்தத்தில் சுமார் 7,000 முதல் 25,000 வரை இரத்த வெள்ளையணுக்கள் அடங்கியுள்ளன. இந்த வெள்ளையணுக்களின் மிக முக்கியமான செயல் நோயை எதிர்ப்பதுதான். மனித உடலில் இதன் ஆயுட்காலம் சில வாரங்கள் மட்டுமே. இரத்த சுழற்சியின் காரணமாக இவை புதிப்பித்துக் கொண்டே இருக்கும். புகைபிடித்தலின் மூலமாக பாதிக்கப்படுகின்ற இவ்வகைச் செல்கள் எலும்புகளின் ஓரங்களின் தங்கி பிளவுபட்டு கட்டிகளை உருவாக்கின்றன. இந்நோயினால் பாதிக்கப்பட்ட மனிதனின் ஒரு துளி இரத்தத்தில் 50,000 வரை உள்ளன. இவை எலும்புகளின் வலுத்தன்மையை இழக்கச் செய்கின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைக்கின்றன. இதனால் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் விரைவிலேயே மரணத்தை முத்தமிட்டு விடுகிறார்கள்.
குடல் நோய்கள் (Stomach Ulcers)
உள்ளிழுக்கின்ற புகையில் கலந்திருக்கின்ற மோனாக்ஸைடு மற்றும் நிக்கோடின் துகள்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் கலந்து குடல் வழியாக வயிற்றுக்குச் செல்கிறது. இது குடலில் ஜீரணிப்பதற்காக சுரக்கின்ற என்ஸைம்களுடன் இணைந்து அதன் இயற்க்கைத் தன்மையை மாறச் செய்கின்றது. இதனால் குடலில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகி குடலுறிஞ்சிகளை அழிக்கின்றன. இதனால் குடல் பாதிப்படைகிறது. சில சமயம் அப்பெண்டிக்ஸ் என்னும் குடல் வளர்ச்சிக்கும் இதுவே காரணமாக அமைந்துவிடுகிறது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் படபடப்புத்தன்மை (Hyper Tension)
ஆரோக்கியமான ஒவ்வொறு மனிதனின் உடலிலும் சராசரியாக 5 லிட்டர் இரத்தம் இருக்கும். இந்த இரத்தத்தின் பருப்பொருளாக ஹீமோகுளோபின், பிளாஸ்மா, குளுக்கோஸ், வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள் மற்றும் இதர பொருட்கள் இருக்கின்றன. இதயம் இரத்தத்தை பம்ப் செய்வதன் மூலம் ரத்த நாளங்கள் மூலம் உடலின் பல்வேறு பகுதிக்கும் இரத்தம் சுழன்று உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்கிறது. இவ்வாறு இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும். புகைப்பதால் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு கூடுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தமும் படபடப்புத்தன்மையும் ஏற்படுகிறது.
தசைச் சுருக்கம்
இரத்தத்தில் இது போன்று ஆக்ஸிஜன் குறைந்து கார்பனின் அளவு கூடும் போது தோலில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் புரோட்டீனின் அளவு குறைகிறது. இதனால் சீரான இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. விளைவு கண்களைச் சுற்றிலும் உள்ள மெல்லிய தசைகளிலும் மற்றும் கன்னங்கள், உதடுகளின் தோல் சுருங்கி வரிகள் போன்ற பள்ளங்கள் ஏற்படுகின்றன. புகைப்பிடிப்பவர்களின் முகம் எப்பொழுதும் வரண்ட நிலையிலேயே காணப்படும். இதனால் வயது முதிர்ந்தவர்கள் தோற்றத்தை மிகவும் விரைவிலேயே பெற்று விடுகிறார்கள்.
பற்கள் பாதிப்பு மற்றும் வாயில் ஏற்படும் அலர்ஜி
புகையை உள்ளிழுத்து வெளியிடுவததால் இவர்களின் உதடுகளின் தோல்களின் மெலேனியம் பாதிப்படைந்து கருக்கின்றன. பற்களின் உள்ளும் புறமும் நிக்கோடின் படிவதால் பற்கள் மஞ்சள் நிறமடைந்து விகாரமாகின்றன. காலப்போக்கில் பற்களின் நிறம் நிரந்தரமாக கருப்பாக மாறுகிறது. மேலும் நிக்கோடின் படிவதால் பற்களில் உள்ள கால்சியம் குறைகிறது, பற்களின் ஈறுகளில் பாக்டீரியாக்கள் உருவாகி பற்களின் வலுத்தன்மையை இழக்க வைக்கின்றன.
மேலும் இத் தீய பழக்கம் மண்ணீரல், கல்லீரல், நரம்புத்தளர்ச்சி, கடுங் குளிர்காய்ச்சல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுவதற்கு சாத்தியமாக அமைகிறது.
வீண் விரையம்
புகை பிடிக்கின்ற ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு எவ்வளவு பொருட்செலவு செய்கிறார்கள். மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கு எவ்வளவு வீண்விரையம் செய்கிறார்கள் என ஒரு நிமிடம் தாங்களே கணக்கிட்டுப்பார்த்தால் அவர்களே வியக்கும் வகையில் வீண்விரையம் செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சராசரியாக 30 வருடம் புகைப்பிடிக்கும் மனிதர்கள் தனது வாழ்வில் கீழ்கண்டவாறு சிகரெட்டிற்கு செலவழித்திருக்கிறார்கள்.
சராசரியாக புகைத்த ஆண்டுகள் சராசரியாக 1 நாளைக்கு புகைபிடிக்க ஆன செலவு மொத்தம் கரியாக்கிய ரூபாயின் மதிப்பு 30 ஆண்டுகள் 10 ரூபாய் 1,09,800.00 ரூபாய் 30 ஆண்டுகள் 25 ரூபாய் 2,74,500.00 ரூபாய் 30 ஆண்டுகள் 50 ரூபாய் 5,49,000.00 ரூபாய்
இதுவல்லாமல் புகைத்ததால் வந்த நோயிற்கு மருத்துவம் பார்க்க செலவழிக்கும் ரூபாய்கள் மேற்குறிப்பிட்ட லட்சங்களைத் தாண்டிவிடும்.
எனவே நீங்கள் இதற்காகச் செலவழிக்கும் பணத்தை உங்கள் குடும்ப வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாமே. தர்மம் செய்தால் கூட மறுமையில் ஒன்றுக்கு பல மடங்காகப் பெறலாம் என்பது உங்கள் சிந்தனைக்கு எட்டவில்லையா?
சிந்தித்து நல்லறிவு பெரும் மக்களுக்கு ஆரம்பத்தில் குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளையே போதுமானதாகும். அன்புச் சகோதரர்களே இத்தீய பழக்கத்திலிருந்து நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.
இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள். ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)
மேலும் கூறுகின்றான் எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம் அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (அல்குர்ஆன் 4:30)

மீலாது கொண்டாட்டம் ஓர் இஸ்லாமிய பார்வை


பிறத்தல், பிறந்த நேரம், பிறந்த இடம் போன்ற அர்த்தம் தரும் ‘மீலாது’ என்கின்ற பதப் பிரயோகம்,  ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்’என்ற பெயரில் ரபீஉல் அவ்வல் மாதத்தில் அரங்கேற்றப்படுகின்ற பண்டிகைக்கே முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கழிப்பறை ஒழுக்கம் முதல் அரசாட்சி நடாத்துவது வரை தன்னிகரில்லா உயரிய வழிகாட்டலினை வழங்கி நிற்கும் இறைமார்க்கமாம் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மீலாது விழா குறித்து நோக்குவோம்.
பரிபூரணப்படுத்தப்பட்ட இறைமார்க்கம்
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (துல்ஹஜ் 10ஆம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது ‘இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘அழ்ழாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவிற்கு மௌனமாக இருந்தார்கள்) பிறகு ‘இது ‘நஹ்ர்’ உடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே!’ என்று சொன்னோம். நபியவர்கள், ‘இது எந்த ஊர்? இது புனித நகரமல்லவா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே!’ என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் (புனிதம் வாய்ந்த) உங்களது இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும், உங்கள் செல்வங்களும், உங்களது மானமும், உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே’ என்று கூறிவிட்டு, ‘(நான் வாழ்ந்த இதுகாலம் வரை உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா’ எனக் கேட்டார்கள். நாங்கள் ‘ஆம் (தெரிவித்துவிட்டீர்கள்)’ என்று பதிலளித்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘இறைவா! நீயே சாட்சி என்று சொன்னார்கள்.’ பிறகு (மக்களிடம்) ‘இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை(ப் பிறருக்கு)த் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர் தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக் கொள்பவரிடம் தெரிவிக்கலாம் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-7078)
குறித்த ஆதாரபூர்வமான நபிமொழி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மார்க்கத்தில் மிகச் சிறியதொரு விடயத்தைக் கூட விட்டு வைக்காது இறைச்செய்திகள் அனைத்தையும் எத்தி வைத்துவிட்டார்கள் எனக்கூறுகின்றது.
மீலாது, மௌலீது போன்ற அநாச்சாரங்கள், புதுவழிகள் மார்க்க அங்கீகாரம் பெற்ற விடயம் என ஒருவர் நம்புவாராயின் நபிகளார் (ஸல்) அவர்கள் தமது தூதுத்துவப் பணியை சரியாக நிறைவேற்றவில்லை எனவும், மீலாது, மௌலீது போன்ற மார்க்கத்தில் உள்ள விடயங்களை நபிகளார் (ஸல்) அவர்கள் சொல்லாது விட்டுவிட்டார்கள் என்பகவும் ஆகிவிடும். மேலும், அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)
மீலாது, மௌலீது போன்ற விடயங்கள் மார்க்க அம்சம்தான்  என வாதிடும் போது, மேலுள்ள திருமறை வசனத்தையும் மறுத்த பாவிகளாக ஆவதோடு, மார்க்கம் முழுமைப்படுத்தப்படாதது என்று கூறுகின்ற பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்களாகின்றோம். (இவ்வாறு வாதிடுவதிலிருந்து அழ்ழாஹ் எம்மனைவரையும் காப்பாற்றுவானாக!)
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அவசியம்
ஒரு முஸ்லிம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிக்காத வரை அவனுடைய ஈமான் பூரணமடையாது. இது குறித்து திருமறைக் குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
‘நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்’  (அல்குர்ஆன் 33:06)
இது குறித்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில், ‘உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை,  ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார் என்று  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-15)
நபிகளாரை எவ்வாறு நேசிக்க வேண்டும்?
அழ்ழாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் ஒரு விடயத்தை மார்க்கம் என்று தீர்மானித்து விட்டால் அதில் கூட்டல், குறைத்தல் செய்யாது, சுன்னாக்களை சில்லறைகள் என்று கூறி அற்பமாகக் கருதாது வஹியை மாத்திரம் பின்பற்றுவதே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதாக அமையும்.
திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. ‘நம்பிக்கை கொண்டோரே!  நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்), உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.’  (அல்குர்ஆன் 4:59)
மேலும், அருள்மறையாம் திருமறை கூறுகின்றது.
‘நீங்கள் அழ்ழாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அழ்ழாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அழ்ழாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக!’ (அல்குர்ஆன் 3:31)
‘அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அழ்ழாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம், கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.’ (அல்குர்ஆன் 24:51)
மீலாது விழாவின் தோற்றம்
இஸ்லாமிய வரலாற்றில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை மீலாத் விழா கொண்டாடப்படவில்லை. ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் தாங்கள் ‘பாத்திமா (ரழி) அவர்களின் பரம்பரையினர்’ எனப் போலியாக வாதிடக் கூடிய, அலி (ரழி) அவர்களே ‘நபித்துவத்திற்கு தகுதியானவரர்கள்’ என்றும், விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபித்தோழர்களை விட ஏனைய நபித்தோழர்களை காபிர்கள் எனவும் வாதிடக்கூடிய ‘பாத்திமிய்யாக்களினால்’  எகிப்தில் ஆட்சி நிறுவப்படுகின்றது. ‘அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ்’ என்கின்ற யூதனின் சந்ததியினரே இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களை தம்பக்கம் கவர்வதற்காகவும், தமது ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பாத்திமிய்யாக்களின் நான்காவது ஆட்சியாளனான ‘அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி’ என்பவனால் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பெயரிலும், பாத்திமா (ரழி), அலி (ரழி), ஹுசைன் (ரழி), ஹஸன் (ரழி) ஆகியோரின் பெயரிலும், ஆட்சியாளர் ஹாழிர் (பாத்திமிய்யாக் களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஹிஜ்ரி 230ல் பிறந்து இன்று வரை மறைவாக உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்) என்பவர் பெயரிலும் மீலாத் விழா (பிறந்த நாள்)  கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது.
எனவே, இந்த மீலாத் விழாக் கொண்டாட்டங்கள், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் தோற்றுவிக்கப் பட்டவையேயன்றி அழ்ழாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
பிற மதக் கலாசாரத்திற்கு ஒப்பாதல்
பிறந்த நாள் கொண்டாட்டம் இறைமார்க்கத்தில் வரம்புமீறிச் சென்ற கிறிஸ்துவ சமுதாயத்தினரின் கலாசாரமாகும்.
‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: அபூதாவுத்-4033)
மேற்படி நபிமொழியைப் படித்த பின்பாவது மீலாத் விழாவினை ஆதரிக்கக் கூடிய சகோதரர்கள் கிறிஸ்த்தவர்களுக்கு ஒப்பாகக் கூடிய மீலாத் விழா கொண்டாட்டத்தை விட்டொழிக்க முன் வர வேண்டும்.
மீலாது கொண்டாட்டம் வழிபாடல்ல! வழிகேடு!
சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வித கூட்டலும், குறைத்தலும் இன்றி தனது தூதுத்துவப் பணியை மிகச் சரியாக நிறைவேற்றிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மீலாது கொண்டாட்டம் மார்க்கத்தில் உள்ள விடயமாக இருந்திருந்தால், நிச்சயமாக அதனை நமக்கு கற்றுத் தந்திருப்பார்கள். ஆனால், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கோ, தமக்கு முன்சென்ற இறைத் தூதர்களுக்கோ மீலாது விழாக் கொண்டாடவுமில்லை. கொண்டாடுமாறு கட்டளையிடவுமில்லை.
மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் ‘சிறந்த தலைமுறை’ என சிலாகித்துக் கூறப்பட்ட உத்தம நபித்தோழர்கள் காலத்திலோ, அதற்கடுத்து வந்த தலைமுறையினர்களது காலத்திலோ மீலாது விழா என்கின்ற அநாச்சாரம் இருந்ததில்லை. இதோ அழ்ழாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
‘உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.’ இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது என்று கூறுகிறார்கள்.(அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2651)
மீலாதும் நரக நெருப்பும்
மீலாத் விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதானது இந்த மார்க்கத்தின் சொந்தக்காரனான அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.
‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ் வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)
அகிலத்தின் இரட்சகன் அருளாளன் அழ்ழாஹ்விற்கும், அவனது அருமைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் பாடம் கற்பிப்பது போன்று, (அழ்ழாஹ் இத்தகைய செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பானாக!) இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாது கொண்டாட்டம் எம்மை நிச்சயமாக கொழுந்து விட்டெறியும் நரக நெருப்பிலேயே கொண்டு போய்ச் சேர்க்கும்.
இதோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்  கொண்டு சேர்க்கும்.’  (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)
இன்று இம்மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் ஊர்மட்டங்களில் வழக்கொழிந்து போய்விட்டாலும் கூட பாடசாலை மட்டங்களில், இஸ்லாத்தின் இனிய போதனைகள் விதைக்கப்பட வேண்டிய மாணவப் பருவத்தினரின் பிஞ்சு நெஞ்சங்களில் மீலாது எனும் அநாச்சாரமும், அந்நிய சமூகங்கள் மீது, மோகத்தை ஏற்படுத்தும் இத்தீய கலாசாரமும் விதைக்கப்படுவதையிட்டு பொறுப்பாளர்களும், பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் மாணவ சமூகமும் விழிப்பாக இருக்க வேண்டும்.
இறுதியாக, மீலாத் விழாவை ஆதரிக்க கூடிய சகோதரர்களே! நீங்கள் உண்மையில் அழ்ழாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் நேசிக்க கூடியவர்களாயிருந்தால், இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாத் விழா போன்ற அனாச்சாரங்களை விட்டொழித்துவிட்டு, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை முறை எவ்வாறு இருந்தது? நோன்பு மற்றும் பெருநாள் வணக்கங்களில்  தூதர் (ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது? பிரார்த்தனையின் போது தூதரின் வழிமுறை எவ்வாறு இருந்தது? அன்றாட நடவடிக்கைகளில்  தூதர் (ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது? என வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அற்பமானது, சிறியது, பெரியது எனக் கருதாது அருள்மறைக் குர்ஆன், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் மூலம் அறிந்து பின்பற்றுவதனூடாக தூதர் (ஸல்) அவர்கள் மீதான உண்மையான நேசத்தை வெளிப்படுத்துவோமாக!